இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர்,கடந்த சனிக்கிழமை முதல் தீவிரமான தாக்குதலை தொடங்கி உள்ளனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த கொடூர தாக்குதலில் ஏராளமான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். காசா பகுதியில் இருந்து திடீரென இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளினர்.

பல பெண்களை இருசக்கர வாகனங்கள், கார்களில் வைத்து கடத்தினார்கள். வீடுவீடாக போய் பல இஸ்ரேலியர்களை கொன்று குவித்தார்கள். இதனிடையே காசாவில் இருந்து கிழக்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தெற்கு இஸ்ரேலில் உள்ள Kfar நகரில் 10 மாத இரட்டை குழந்தைகளுடன் 30 வயதாகும் Itai மற்றும் Hadar Berdichevsky ஆகிய இளம் இஸ்ரேலிய தம்பதியினர் வசித்து வந்தனர்.

அப்போது அந்த பகுதி முழுவதும் ஹமாஸ் இயக்கத்தினர் வீடுவீடாக புகுந்து இஸ்ரேலியர்களை கொல்ல தொடங்கினர். அப்போது இஸ்ரேலிய தம்பதியினர் எப்படியும் சாகப்போகிறோம். நம் குழந்தைகளையாவது எப்படியாவது மறைத்து வைத்து காப்பாற்றுவோம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதன்படி தங்கள் இரட்டைக் குழந்தைகளை ஹமாஸ் பயங்கரவாதிகளிடமிருந்து மறைத்து வைத்துவிட்டனர். அப்போது அங்கு வந்த ஹமாஸ் இயக்கத்தினர் Itai மற்றும் Hadar Berdichevsky ஆகிய இருவரையும் கொன்றுவிட்டு சென்றார்கள்.

முன்னதாக தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் உயிர் பிழைக்க முடியவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன, இதனிடையே இளம் தம்பதியினர் மறைத்து வந்த 10 மாத இரட்டை குழந்தைகள்,14 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டன.

இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் குழந்தைகளை மீட்டு அவர்களது பாட்டியிடம் ஒப்படைத்தனர்.