இந்தியா: தமிழ்நாடு
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக அவ்வப்போது ஆக்ரோஷமான கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாக கொண்டவர் எச்.ராஜா. அவ்வப்போது பிரஸ் மீட்களின் போதும் இவர் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூட எச்.ராஜா, நீதிமன்றம் குறித்து செய்தியாளர்களிடம் ஆவேசமாக தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையானது. அப்போது எச்.ராஜா மீது வழக்கு பதியப்பட்டாலும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் எச்.ராஜாவுக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜரானார். இந்த விசாரணையின் போது, நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா. அத்துடன் நான் பேசியது தவறுதான். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தேன் எனவும் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார். இதனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் எச்.ராஜா மீது தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற ஊர்வலத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு மதத்தினர் இடையே மோதல் போக்கை உருவாக்கும் விதமாக பேசியதாக 4 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.