இந்தியா: தமிழ்நாடு

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லையென உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இது தொடர்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது...

தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் இந்த விடியா ஆட்சியில், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் போக்குவரத்து கழக ஊழியர்கள் குறிப்பாக திமுகவின் தொமுச-வினர் அறிவிக்கப்படாத திடீர் போராட்டத்தை நடத்தினர்.

அதிலிருந்து மீள்வதற்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் வழங்கப்படாததால், இன்று மெட்ரோ குடிநீர் லாரிகளை இயக்குவோர் திடீர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆட்சியில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதும், இனி அடுத்தடுத்து என்ன போராட்டங்கள் வருமோ என்கிற அச்ச உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.

ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத, உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர் , இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளையாவது நிறைவு செய்ய வேண்டிய நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் கூறியுள்ளார்.