தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு விமானம் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன் புறப்பட்டது.

இந்த விமானத்தில் 194 விளையாட்டு வீரர்கள் உட்பட சுமார் 200 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் டேகு விமான நிலையத்தில் தரை இறங்க தயாராகி கொண்டிருந்தது.

இந்நிலையில் தரையில் இருந்து சுமார் 200மீ உயரத்தில் விமானம் இருந்தபோது, அவசரகால வெளியேற்ற கதவின் அருகே அமர்ந்திருந்த ஒரு வாலிபர் கதவை திறந்துள்ளார்.

இதனால் விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

இதனையடுத்து பலருக்கு மூச்சு திடீரென திணறல் ஏற்பட்டது.

எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த வாலிபரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இதில் அந்த வாலிபர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக கூறினார்.

எனினும் விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.