இந்தியா: தமிழ்நாடு

தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையினுடைய 25-வது பொதுக்குழு மற்றும் பொன்விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சருக்கு முன்னதாக பேசிய திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஸ்டாலின் பிரதமராகும் காலம் விரைவில் வரும் என்பதை அவர் முன்னிலையிலேயே கூறினார்.

துரைமுருகனின் இந்த ஆசை குறித்து ஸ்டாலின் தனது பேச்சில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதைப்பற்றி எதுவும் குறிப்பிடாதது பிரதமர் பதவி மீது அவருக்கும் ஆர்வம் இருப்பதை உணர்த்துகிறது.

ஏற்கனவே ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என ஃபரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ள நிலையில் துரைமுருகனின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஓராண்டு கூட இல்லாத நிலையில், பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினை தான் முன்னிறுத்த வேண்டும் என்பதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இப்போதே சூசகமாக வெளிப்படுத்த தொடங்கிவிட்டார்.