இந்தியா: தமிழ்நாடு

கோவை மாவட்டம் கோவை ஈச்சனாரி செல்வ மஹாலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளா்கள் வினோத் தவுடு, சி.டி ரவி மற்றும் தமிழகத்துக்கான மேலிட இணைப் பொறுப்பாளா் பி. சுதாகா் ரெட்டி, முக்கிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோா் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை நிகழ்ச்சிகளை, தமிழகமெங்கும் ஒரு மாதத்துக்கு பிரசார இயக்கமாக எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தான் பா.ஜனதா தனித்து போட்டியிடும். இல்லாவிட்டால் பதவியையே ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார்.

இதனால் பா.ஜ.க -அ.தி.மு.க. கூட்டணியில் உரசல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை அமித் ஷா சமாதானப்படுத்தினார். அ.தி.மு.க. கூட்டணியையும் உறுதிப்படுத்தினார். அகில இந்திய அளவில் உறுதிப்படுத்தினாலும் மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை.

அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படியானால் தான் இரு கட்சி தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் தான் இன்று நடக்கும் செயற்குழு கூட்டத்தில் தனித்து போட்டியில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை அண்ணாமலை வெளியிடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த செயற்குழு கூட்டத்தை பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள்.