நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களும் வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் ஒருசேர பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் 4வது பாகத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்த அவர் படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி மற்றும் நாயகிகளாக தமன்னா, ராஷி கண்ணாவை அறிவித்தார்.

ஆனால் முதலில் இந்தப் படத்தில் கமிட்டான விஜய் சேதுபதி, தவிர்க்க முடியாத காரணங்களால் படத்திலிருந்து விலகினார்.

இதையடுத்து சுந்தர் சியே இந்தப் படத்தின் நாயகனாக களமிறங்கியுள்ளார். மற்றும் யோகிபாபு, வடிவேலு, மீனா, கே பாக்கியராஜ் உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த இரு மாதங்களாக விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் நடிகை தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளதாகவும் சமீபத்தில் அவரது கவர்ச்சி நடனம் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சென்னை ஈசிஆரில் தற்போது மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கொச்சியில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரண்மனை 4 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.