ஊடகவியலாளராக இருந்து அரசியலில் குதித்தவர் விக்ரமன். இவர் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் விக்ரமன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய கிருபா முனுசாமி என்ற பெண் விசிக தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த நான் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சமூக நீதி அமைச்சகத்தின் மூலம் லண்டனில் சட்டத்துறையில் முனைவர் பட்டப்பிடிப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

தங்கள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் அரசியல் நிகழ்ச்சிகளின் மூலமாக என்னுடன் நட்பாய் இருந்து நான் லண்டனுக்கு சென்ற பிறகு என்னை காதலிப்பதாக கூறினார். அவருக்கும் முற்போக்கு அரசியலில் பிடிப்புருந்தது போல் தோன்றியதால் நான் சம்மதித்தேன். நாங்கள் பழகி வந்த இந்த மூன்று ஆண்டுக்காலத்தில் என்னை பலமுறை ஆபாச வார்த்தைகளால் அவமானப்படுத்தியிருக்கிறார்.

ஒரு தலித்தாக இருப்பதினாலயே எனக்கு அரசியல் ஆதாயம் கிடைப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார். அவரை எதிர்த்து கேள்வி கேட்டால், 'நீயே போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து கவர்மென்ட்டை ஏமாற்றி ஸ்சோலர்ஷிப் வாங்கி ஓசி சோறு சாப்புட்ற' என்று கீழ்த்தரமாக பேசினார்.

அதுமட்டுமில்லாமல் நான் விசிகவில் உள்ள தலித் ஆண்களை வைத்து தங்கையையும், தாயையும் வன்புணர்வு செய்து விடுவேன் என்றும் குற்றம் சாட்டினார்.

ஒரு தலித் பெண்ணாக என்னுடைய வாழ்வனுபவத்தை கொச்சைப்படுத்தியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்.

என்னை மட்டுமல்லாது தங்களுடைய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் குறித்தும் என்னிடம் அவதூறாக பேசியிருக்கிறார்‌.

என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, ஜாதிய ரீதியில் அசிங்கமாக பேசி பணம் பறித்து உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலைக்கு தூண்டிய விக்ரமன் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவை அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஜாதிய சட்ட வல்லுனரான, அரசியல் ரீதியாக இத்தனை தொடர்புகள் உள்ள என்னையே விசிகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் விக்ரமன் இவ்வளவு தைரியமாக இத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கியிருந்தால் இன்னும் சாதாரண பெண்களின் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

விக்ரமன் மீது தாங்கள் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காவிடில் அது தலித் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கும் கட்சியின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி விடும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்ரமன் மீது பெண் வழக்கறினர் தெரிவித்துள்ள இந்த பகீர் குற்றச்சாட்டுகள் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.