இந்தியா: தமிழ்நாடு

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை "எதற்கும் துணிந்து தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். திமுக ஃபைல்ஸ் சொத்து பட்டியல் முதல் பாகத்துடன் நிற்கப்போவதில்லை. தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சிகள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறதோ, அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்பலப்படுத்தப்படும். காரணம் ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் மொத்தமாக தான் எதிர்க்க வேண்டும்" என காட்டமாகப் பேசினார்.

இந்நிலையில் திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ள கையோடு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவைத்தான் மறைமுகமாக அண்ணாமலை சாடியதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதற்காகவே அண்ணாமலை இப்படி பேசியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான், அண்ணாமலைக்கு அதிமுகவினர் ரியாக்ட் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான கேபி முனுசாமி இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக பிரமுகர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை அண்ணாமலை பதிவு செய்துள்ளார். பாஜக மாநிலத் தலைவராக இருந்து இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டாரா? அல்லது தனிப்பட்ட அண்ணாமலை என்ற நபராக இருந்து இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டாரா?

பாஜக தலைவராக இருந்து அண்ணாமலை இந்த பட்டியலை வெளியிட்டார் என்றால் அவர்கள் ஆட்சி செய்கிற மாநிலங்கள் தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் அந்தந்த மாநில பாஜக தலைவர்கள் வெளியிட இருக்கிறார்களா? என்பதை நான் அறிய விரும்புகிறேன்." எனத் தெரிவித்தார்.

தான் மட்டுமே இந்த நாட்டுக்காக உழைக்கப் பிறந்தவர் போல பேசிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இந்த நாட்டிற்காக உழைத்தவர்கள், உழைத்துக் கொண்டிருப்பவர்கள், தியாகம் செய்தவர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள், தன்னை முழுமையாக மக்களுக்காகவே அர்ப்பணித்து சேவை செய்துகொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது அண்ணாமலை ஏதோ சொல்கிறார், அதில் கருத்து கூற ஒன்றும் இல்லை என்றார்.