ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா மீன்பிடித் துறைமுகத்தை சுற்றிப்பார்த்தார். பின்னர் அங்கு ஒரு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் மீது ஒரு நபர் கையெறி குண்டு ஒன்றை வீசியுள்ளார். அதிக சத்தத்துடன் குண்டு வெடித்து புகை மூட்டம் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜப்பானிய அதிகாரிகள், கிஷிடா பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளனர். ஜப்பானின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்எச்கே வெளியிட்ட வீடியோ காட்சிகளில் பொதுமக்கள் தப்பியோடியதையும், சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டதையும் காட்டுகிறது.

கிஷிடாவின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் உறுப்பினரான ஹிரோஷி மோரியாமா இது கூறியதாவது...

ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது வருந்தத்தக்கது. இது மன்னிக்க முடியாத குற்றமாகும் என கூறினார்.

ஜப்பானில் வன்முறை தாக்குதல்கள் மிகவும் அரிதானவை. ஆனால், கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அரசியல்வாதிகளைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.