இந்தியா: தமிழ்நாடு

கடலூர் தனியார் பள்ளியில் 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளரும் திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பக்கிரிசாமி என்பவரை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதோடு கடும் நடவடிக்கைக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இச்சம்பவம் குறித்த தகவல் கோரலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு;

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சக்தி நகரில் இயங்கிவரக்கூடிய தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் தாளாளரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர்மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி, விருத்தாசலம் நகர மன்றத்தின் 30-வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனேயே, அவரின் தி.மு.க அடிப்படை உறுப்பினர் நிலை இரத்து செய்யப்பட்டு, கட்சியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

எங்களது அரசைப் பொறுத்தவரையில், "நான் செய்தியைக் கேள்விப்படவில்லை - தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்" என்று நான் சொல்லத் தயாராக இல்லை.

இந்தச் செய்தியை அறிந்தவுடனேயே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசினேன். சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்து, அது தொடர்பான செய்தியை எனக்குத் தந்தார்கள்.

இந்த அரசைப் பொறுத்தரையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம். அந்த வகையில், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள்மீது எந்தவித பாரபட்சமுமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுத்திடுவோம் என்பதை இந்த அவையில் நான் உறுதியோடு பதிவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.