இந்தியா: தமிழ்நாடு

கடலூர் தனியார் பள்ளியில் 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளரும் திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இந்நிலையில் பக்கிரி சாமியை கட்சியில் இருந்து நீக்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பக்கிரிசாமி திமுகவை விட்டு நீக்கப்பட்ட சில நிமிடங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பக்கிரிசாமியிடம் விருத்தாசலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.