நடிகை குஷ்பு, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

சமீபத்தில் குஷ்பு ஐதராபாத் சென்று ஆஸ்கார் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். படக் குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நடிகர் சிரஞ்சீவியையும் சந்தித்தார். இந்த நிலையில் குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவருக்கு கடும் காய்ச்சல் இருந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிகிச்சை பெறும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது....

நான் ஏற்கனவே தெரிவித்தது போல புளு காய்ச்சல் மிகவும் மோசமானது. சமீபத்தில் என்னை அந்த காய்ச்சல் பாதித்துவிட்டது. காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்ட நான் நல்லவேளையாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

உடல் சோர்வடைவதை உணர்ந்தால், அதைப் புறக்கணிக்காமல் உடனடியாக தகுந்த சிகிச்சை மேற்கொள்ளுங்கள். இப்போது நான் சிகிச்சையில் இருக்கிறேன். சில நாட்கள் இந்த சிகிச்சை தொடரும் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குஷ்பு வேகமாக குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.