கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா 'அதிரடி' விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு.

ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடும் அல்லது உடைந்து சிதறிவிடும்.

மிக அரிதாக சில சிறுகோள்கள் அல்லது எரிநட்சத்திரங்கள் மட்டும் பூமிப் பரப்பை மோதிய சம்பவங்களும் நடந்துள்ளன. அதன் தாக்கமும் கடுமையாக இருந்திருக்கிறது.

எனவே, பாறை, உலோகம் அல்லது பனியால் ஆன இந்த சிறு, குறுங்கோள்கள் பூமியை நெருங்கிவரும்போது, அமெரிக்காவின் 'நாசா' போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விழிப்போடு கண்காணிக்கின்றன.

அதன் விளைவாக, மணிக்கு 67 ஆயிரத்து 656 கி.மீ. என்ற அதிபயங்கர வேகத்தில், 150 அடி விட்டம் கொண்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி சீறிவருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு விமானத்தின் அளவிலான, பாறையாலான '2023 எப்இசட்3' என்ற அந்த சிறியகோள், நாளை (06) பூமியை 'நெருங்கி' வருகிறது.

இதனால் யாரும்
அச்சப்பட வேண்டியதில்லை. இந்த சிறுகோள் சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு அருகில் வந்துவிட்டு செல்லப்போகிறது.

இதனால் ஆபத்தில்லை என்பதில் நாம் அமைதியடையலாம்.