இந்தியா: தமிழ்நாடு

அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் அவரது எம்பி பதவி கடந்த சில நாட்களுக்கு முன் பறிக்கப்பட்டது.

இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் நாகர்கோயிலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோயிலில் இருக்கு பாஜக மாவட்ட அலுவலகம் முன்பாக திரண்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் பாஜக மாவட்ட அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதாக கூறி பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்தனர்.

இதனையடுத்து நேற்று கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது...

கன்னியாகுமரி பாஜக மாவட்டத் தலைவர் திரு தர்மராஜ் அவர்களையும், திருநெல்வேலி முன்னாள் மாவட்டத் தலைவர் திரு மகாராஜன் அவர்களையும், மற்றும் பாஜக தொண்டர்களையும் கைது செய்துள்ள தமிழ்நாடு காவல்துறையின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பாஜக அலுவலகத்தைத் தாக்கிய ஜனநாயக விரோதிகளைக் கைது செய்வதை விட்டுவிட்டு, அவசர கதியில் பாஜகவினரைக் கைது செய்வது யாரைத் திருப்தி படுத்துவதற்காக? காவல்துறையை ஏவல்துறையாக முழுவதுமாக மாற்றியிருக்கும் திறனற்ற திமுக, நாளொரு கொலை நடந்து மாநிலமெங்கும் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டுள்ள பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.