இந்தியா: தமிழ்நாடு

கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது.

இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது.

ஏப்ரல் 1-ம் திகதி முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில், தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, ஜோதிகா, தேவ் மற்றும் தியா ஆகியோர் குடும்பத்துடன் பார்வையிட்டனர்.

இந்நிலையில் சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் வந்திருந்தபோது, கீழடியில், அங்கு வந்த மாணவர்களை வெளியே காக்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

அது தற்போது போலீஸ் புகார் வரையும் சென்றுள்ளது. இது தொடர்பாக மதுரை பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கர்க்கை சந்தித்து புகார் மனு ஒன்றை தந்துள்ளனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது..

கடந்த 1ம் தேதி அருங்காட்சியகத்திற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி. சுவெங்கடேசன் மற்றும் நடிகர்கள் சூர்யா, சிவகுமார், ஜோதிகா அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட கால வரையறை நேரத்திற்கு முன்பாகவே கீழடி அருங்காட்சியகத்திற்குள் சென்றுள்ளனர். கண்காட்சி திறக்கும் நேரமான பத்து மணிக்கு மேலாகியும் பொதுமக்கள் அனுமதிக்கபடவில்லை. பள்ளி மாணவ மாணவிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பல மணி நேரம் கால் கடுக்க கடும் கோடை வெயிலில் நிறுத்தி வைக்கபட்டனர்.

நடிகர் சூர்யா உள்ளிட்டோர் விதிமுறைகளை மீறி உள்ளே சென்றுள்ளனர். மேலும், தனது தனிப்பட்ட நலனுக்காக எம்.பி.வெங்கடேசன் பாராளுமன்ற நடத்தை விதிகளை மீறி நடிகர்களை அழைத்து சென்றதாகவும், இதற்கு அனுமதி அளித்த அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலத்தில் பொது மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தின் பராமரிப்பு, மற்றும் நிர்வாகத்தை மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.