இந்தியா: தமிழ்நாடு

அஜித்குமாரின் தந்தை மார்ச் 24ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார்.

இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.

அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அஜித்தின் தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அப்போது நடிகர் அஜித்குமார், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

எப்போதும் அரசியல் குறித்த சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து விலகியே இருக்கும் நடிகர் அஜித்குமார், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியுள்ளது பேசுபொருளாகி உள்ளது. முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த போது, பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜித்குமார், சென்னை திரும்பிய பின்னர் குடும்பத்துடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.