தென்னிந்திய திரைப்படங்களில் ஒரு காலத்தில் வில்லனாக பிரகாசித்தவர் பொன்னம்பலம்.

இவர் தற்போது சிறுநீரக செயலிழப்பு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பில் இருந்து, அவரது உறவினரும் இயக்குனருமான ஜெகநாதன் சிறுநீரகத்தை தானம் செய்ததன் மூலம் அவர் மீண்டும் உயிர் பெற்றார்.

பொன்னம்பலத்துக்கு கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர், உடல் நலம் தேறி வருகிறார்.

இந்த நேரத்தில் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் வாழ்க்கையில் தான் சந்தித்த சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது, கமல்ஹாசன், சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ், அர்ஜுன், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரபுதேவா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் வந்து உதவி செய்ததாக கூறினார்.

அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் என்னை அழைத்து உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை. அஜித்தை தனது சொந்த தம்பி போல் நினைத்தேன் அதனால்தான் போன் செய்து நலம் விசாரிப்பார் என்று நினைத்தேன்.ஆனால் விசாரிக்கவில்லை என கூறினார். மேலும் அவர் கூறும் போது குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயனபடுத்தியதால் எனது சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாக பலர் நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

என் தந்தைக்கு நான்கு மனைவிகள். மூன்றாவது மனைவியின் மகன் என் மேலாளராக சில காலம் பணிபுரிந்தார். அப்போது ஒருமுறை பீரில் விஷம் கலந்து கொடுத்தார். முதலில் அவர் அதைச் செய்ததாகத் தெரியவில்லை. பின்னாளில் அந்த ஸ்லோ பாய்சன் என் ரத்தத்தோடு கலந்தது.

இதனால் தான் என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இது எனக்கு தெரியாது. பின்னர் என்னுடன் பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிய வந்தது. நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.

அவனால் நன்றாக வாழ முடியவில்லை. இவையெல்லாம் பொறாமையால் செய்யப்பட்டவை என பொன்னம்பலம் கூறினார்.

மேலும் தக்க நேரத்தில் தனக்கு உதவி செய்த நடிகர்களுக்கும், முகம் தெரியாத ஏராளமான ரசிகர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

பொன்னம்பலம் ஒரு முறை நடுராத்திரியில் வீட்டின் பால்கனியில் நின்றிருக்கிறார். அப்போது அவருடைய சகோதரன் வீட்டின் பின்புறத்தில் ஒரு குழி தோண்டி மாந்திரீக பொம்மை, பொன்னம்பலம் பயன்படுத்திய உடை போன்றவற்றை எல்லாம் போட்டு செய்வினையும் செய்திருக்கிறார்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன பொன்னம்பலம் அந்த துரோகிகளை கையும் களவுமாக பிடித்து துரத்தியுள்ளார்.