இந்தியா: தமிழ்நாடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'எப்போது பார்த்தாலும் நான் கருணாநிதியின் மகன் தெரியுமா என கூவிக் கொண்டு இருக்கிறார். யாருக்கு தெரியாது நீங்கள் கருணாநிதியின் மகன் என்று. கருணாநிதியின் மகன் தான் ஸ்டாலின் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. கருணாநிதியின் மகன் தான் நீங்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்' எனப் பேசினார். எடப்பாடி பழனிசாமி பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

சிவகங்கையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து நாவடக்கம் இன்றி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அவரது பேச்சு அநாகரிகத்தின் உச்சம். மேலும், அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. வக்கிர குணம் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு பேசமுடியும்.

தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர்களில் இவ்வளவு தரம் தாழ்ந்து, அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசும் முதலமைச்சரை தமிழ்நாடு பார்த்ததில்லை.

ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு அவர் பேசும் பேச்சுகளில் கவனம் வேண்டாமா? தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு நாளுக்குநாள் மக்கள் செல்வாக்கு பெருகிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் நிலைகுலைந்து போய், அரசியல் முதிர்ச்சியின்றி எடப்பாடி பழனிசாமி இப்படிப் பேசி வருகிறார். சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள், கண்ணியமான தமிழ்நாட்டின் அரசியல் நாகரீகத்திற்கு, இழுக்கு வந்துவிடும் போலிருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பேசிய தரம் குறைந்த பேச்சுக்கு, அந்தத் தொகுதி மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்து, மிக மோசமாக அவரது கட்சியினரை தோற்கடிக்க வைத்தார்கள். அதிலிருந்து அவர் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

இதேபோன்று வரும் காலங்களில் பேசினால் அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மேலும், சொந்தக் கட்சியினரே அவரை விட்டு விலகி, அவர் அரசியல் அநாதையாகி விடுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.