தமிழில் மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்', தங்கர்பச்சான் இயக்கிய 'அழகி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நந்திதா தாஸ்.

இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது குழந்தைகள் உரிமைகள் மற்றும் பெண்கள் நலனுக்காகவும், நிற பாகுபாடுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

கறுப்பு அழகானது என்ற பிரசார இயக்கத்தையும் நடத்துகிறார். இந்நிலையில் நந்திதா தாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது...

நான் கல்லூரியில் படித்தபோது நிறபாகுபாடு பிரச்சினைகளை பலமுறை எதிர்கொண்டு இருக்கிறேன். அப்போது சில பெண்கள் என்னிடம் தங்களிடம் உள்ள கறுப்பு நிறத்தை வைத்துக்கொண்டு எப்படி தன்னபிக்கையோடு வாழ முடியும் என்று கேட்டனர். அவர்களை ஆச்சரியமாக பார்த்தேன். காரணம் நான் உடல் நிறத்தை பற்றி சிந்தித்தே இல்லை. அதுபோன்ற நெருக்கடியிலும் வளரவில்லை.

ஆனாலும் கடைகளுக்கு நான் அழகுசாதன பொருட்கள் வாங்க செல்லும்போது கடை ஊழியர்கள் என் நிறத்தை பார்த்து நான் வெள்ளை ஆவதற்கு பயன்படும் கிரீம்களை எடுத்து நீட்டினார்கள். நான் அவர்களிடம் இந்த உடம்பிலேதான் பிறந்தேன்; இந்த உடம்பிலேயே இறப்பேன். எனவே என்னை வெள்ளையாக்கும் கிரீம் எதையும் தரவேண்டாம் என்று கூறினேன் என்றார்.