நகைச்சுவை நடிகரான மயில்சாமி இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 57.

அவரின் மறைவுக்கு கமல், யோகிபாபு, சார்லி என பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தீவிர சிவபக்தரான மயில்சாமி, மஹாசிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் இரவு முழுவதும் வழிபாட்டில் பங்கேற்றுவிட்டு, அதிகாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்த, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மயில்சாமியின் மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், எனக்கு பேச்சே வரவில்லை, இடிதாக்கியது போல ஒரு நிலையில் இருக்கிறேன். கடைக்கு போனால் கூட, மயில்சாமியின் வீட்டுக்கு போய் பேசிவிட்டுத்தான் வருவேன். என்னை மாமான்னு ரொம்ப ஆசையாக கூப்புடுவான், அவருடைய மனைவி அண்ணா வாங்க என்று அழகாக அழைப்பார்கள். மயில்சாமி என்பவர் ஒரு சாதாரண மனிதன் இல்லை.

நடிகன், நகைச்சுவை நடிகன், குணச்சித்திர நடிகன் என்பதை எல்லாம் தாண்டி, ஒரு மிகச்சிறந்த மனிதன். மனிதன் என்பதை விட மாமனிதன் என்று தான் சொல்ல வேண்டும். யாரும் பசி என்று அவர் முன்னால் வாடி நின்றுவிட்டால் துடித்துவிடுவார். ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு பாட்டி வெள்ளரிக்காய் எடுத்துவந்தார். கூடையோடு வெள்ளரிக்காயை வாங்கி எல்லாருக்கும் கொடுங்க என்றார்.

கர்ணணைப்பற்றி சொல்லுவார்கள், அள்ளிக் கொடுத்தவன் கர்ணன் என்று அதுப்போலத்தான் மயில்சாமி. பெரிய எம்ஜிஆர் பக்தர், இதனால் எப்போதுமே தானம், தர்மம் செய்து கொண்டே இருப்பார். மழை வந்து வெள்ளம் வந்துவிட்டால், உடனே அனைவருக்கும் சாப்பாடு பொட்டலம் தருவார். அப்படி அவருக்கு ஒரு வெள்ளந்தியான மனசு. ஒரு அற்புதமான நடிகன், ஒரு அற்புதமான மனிதன்.

படப்பிடிப்புக்கு வந்துவிட்டால்,நானும் மயில்சாமியும் ஒன்றாக சாப்பிடுவோம், ஒன்றாக தூங்குவோம், அப்படி சகோதரனாக, மைத்துனனாக, வள்ளலாக வாழ்ந்தவன் மயில்சாமி. மூன்று நாளுக்கு முன் தொலைபேசியில், சிவராத்திரிக்கு கோவிலுக்கு போக அழைத்தார். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்றேன். மிகப்பெரிய சிவபக்தர், சிவன் இவரை அழைத்துக் கொண்டார். மயில்சாமியின் ஆன்மா சிவன் நிழலில் இளைப்பாறட்டும் என எம்.எஸ். பாஸ்கர் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.