இந்தியா: தமிழ்நாடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்கின்ற வீரர் - வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

நேரு விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை அரங்கினை பார்வையிட்டு ‌ மாணவர்களுடன் கலந்துரையாடி கூடுதல் வசதிகள் மற்றும் உபகரணங்கள் தேவை குறித்து கேட்டறிந்தார். அதேபோல் உடற்பயிற்சி கூடம், மாணவ-மாணவியர் தங்கும் விடுதி மற்றும் நடைபெற்று வருகின்ற பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டு கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் கீழ் தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து முறையாக பராமரித்திடவும் கேட்டுக்கொண்டார்.

மேலோட்டமாக ஆய்வு செய்வார் என்று அதிகாரிகள் எதிர்பார்த்த நிலையில் கழிவறை வரை பார்வையிட்டு குறைகளை சரிசெய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி.

இதற்கு எந்த விளையாட்டுத்துறை அமைச்சரும் இப்படி ஆய்வு மேற்கொள்ள ஆர்வம் காட்டியதில்லை எனக் கூறும் வீரர்கள், இந்த ஆய்வுப் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.