இந்தியா: தமிழ்நாடு

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனின் மறைவு, தமக்கு அதிர்ச்சியளிப்பதாக கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கஜேந்திரனை தனது கல்லூரித் தோழர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், கலையுலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் என புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது...

பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது.

திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.