அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் அரசாங்க வருமானத்தில் 3,500 பில்லியன் ரூபாவை ஈட்டுவது தொடர்பான முன்மொழிவுகள் தனது இரண்டாவது குழு அறிக்கையில் உள்ளடக்கப்படும் என பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை கண்டறிவதற்கான தேசிய சபையின் உபகுழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் அரசாங்க வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்களால் 2023 இல் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

நாட்டை பொருளாதாரத்தை திவால் நிலைக்கு இட்டுச் சென்ற காரணிகள் தொடர்பிலும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

2019 டிசம்பர் 01 முதல் அமுல்படுத்தப்பட்ட வரித் திருத்தத்தின் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரிக் கோப்புகளின் தொகை ரூ.1.4 மில்லியனில் இருந்து ரூ.500,000 ஆகக் குறைப்பு மற்றும் வரி வருமானம் அரசாங்கத்திற்கு இழப்பு என்பது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

“உலகளாவிய ஒருமைப்பாடு பற்றிய ஆண்டறிக்கை” வெளிப்படுத்தியபடி, நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயற்பாட்டில் அதிக அல்லது குறைந்த விலைகள் காரணமாகவும்,

 விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலமாகவும் ஒரு பாரிய தொகை நாட்டை விட்டு வெளியேறுகிறது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.