தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உடலில் குளுகோஸ் ஏற்றியபடி சிகிச்சை எடுத்துகொண்டே ஸ்டுடியோவில் டப்பிங் பேசும் புகைப்படத்தை வலைதளத்தில் பகிர்ந்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவில்...

''நான் நடித்த யசோதா படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்த அன்புதான் எனக்கு சவால்களில் இருந்து மீளும் கருவியாக அமைந்துள்ளது. நான் சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டேன்.

நோயின் பாதிப்பு குறைந்ததும் அனைவரிடமும் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் நினைத்ததைவிட குணமாக அதிக நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

இந்த நோய் பாதிப்புடன் போராடி வருகிறேன். விரைவில் குணமடைவேன் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், நல்ல நாட்களையும், மோசமான நாட்களையும் எதிர்கொண்டு இருக்கிறேன்.

இதற்குமேல் என்னால் ஒரு நாளைக்கூட நகர்த்த முடியாது என்று நினைத்த நாட்களும் கடந்து சென்றுள்ளன.

சீக்கிரம் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவும் கடந்து போகும்'' என்று கூறியுள்ளார்.