முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி இந்தியா நடத்தும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார்.

இதனிடையே 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் 'ரோர் ஆஃப் லயன்' என்ற ஆவணத்தொடரை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 'ப்ளேஸ் டு க்ளோரி' ('Blaze to Glory) என்ற ஆவணப்படம் உள்ளிட்ட சில படைப்புகளை தயாரித்துள்ளது.  

இந்நிலையில் 'தோனி என்டர்டைன்மெண்ட்' தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கவுள்ளது.

இப்படம் சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்தை 'அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். 

மேலும் தமிழ் மொழி மட்டுமல்லாது சைன்ஸ் ஃபிக்சஷன், க்ரைம் ட்ராமா, காமெடி, சஸ்பென்ஸ் திரில்லர் உள்ளிட்ட பல வகையான படங்களைத் தயாரிக்கவுள்ளது.

இதற்காக பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில்...

''சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணர முடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்தக் கதை குடும்பங்களை மகிழ்வித்து, சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் என்று நம்பினேன்" என்றார்.