கம்பஹா – தங்கோவிட்ட நகரில் மதுபானசாலையொன்றில் கொள்ளையடித்து தப்பிச்செல்ல முற்பட்டபோது, பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையில் இருப்பதாகவும் வெலிசர நீதிவான் அவர்களை பரிசோதித்த பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், விளக்கமறியல் உத்தரவில் கீழ், இருவரும் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நேற்று இரண்டு கொள்ளையர்கள் தங்கோவிட்ட நகரில் உள்ள மதுபானசாலையை உடைத்து கொள்ளையிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, பொலிஸாருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
 அவ்வேளையில்,அவ்வீதி ஊடாக இ.போ.ச பேருந்தில் பயணித்த 29 வயதுடைய பெண்ணொருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

29 வயதுடைய இரேஷா ஷியாமலி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தார்.

அனுராதபுரத்தில் உள்ள ஆலயமொன்றுக்கு சென்று பூஜையில் கலந்து கொண்டு, களனி பிரதேசத்திலுள்ள தனது சகோதரனுடன் பேருந்தில் வீடு திரும்பியபோதே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.