960 மணிநேரமே என்  இலக்கு, அந்தகாலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்ய முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன்.” இவ்வாறு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

தெரண தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான ‘360’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” மக்கள் பட்டினியால் வாடினால்,  நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆக, சென்று எதையாவது செய் எனக்கூறியே – அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்.

6 மாதங்களுக்குள் உங்களாலும் முடியாவிட்டால் –  பதவி துறந்து வாருங்கள் என மனைவியும் அறிவுரை வழங்கியுள்ளார். அதேபோல ‘தாத்தா கம் ஹோம்’ (அப்பா வீட்டுக்கு வாங்க) – என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் அறிவித்துவிட்டனர்.

அந்தவகையில் எனக்கான காலம் 6 மாதங்கள். அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு வேலை செய்வதற்கான நேரம்.  அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால்,  ‘தாத்தா கம் ஹோம்’ எனக்கூறி பிள்ளைகள் வந்துவிடுவார்கள். அப்போது எனக்கு வீடு செல்ல வேண்டிவரும்.

என்னைபோல் ஒருவருக்கு 6 மாதங்களுக்குள் மக்களுக்கு முன்னேற்றகரமான (பொசிடிவாக)  –  எதையாவது செய்ய முடியாவிட்டால், பதவி வகித்து என்ன பயன்? ”  – என்றார்.

அத்துடன், தனது பணி இலக்குகளையும் தம்மிக்க பெரேரா பட்டியலிட்டு ஆவணமொன்றை வெளியிட்டுள்ளார். டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

வங்குரோத்தடைந்த கம்பனிகளை பொறுப்பேற்று, அதனை கட்டியெழுப்பும் நிர்வாக திறன் உள்ள தனக்கு,  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.