அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். எம். முஷாரப் தன்னை அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து நீக்கியமை இயற்கை நீதிக்கு முரணானது என்ற அடிப்படையில் அக்கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக இன்று (27) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடாத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் யாப்புக்கு எதிராகவும் அதன் தீர்மானங்களுக்கு எதிராகவும் பாராளுமன்ற உறுப்பினர் செயற்பட்டார் என்று தெரிவித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.


மக்கள் காங்கிரஸ் கட்சியானது குறித்த பாராளுமன்ற உறுப்பினரினை கட்சியிலிருந்து  நீக்கியமை தொடர்பாக இம் மாதம் முதலாம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


குறித்த நீக்கம் பற்றி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்த திகதியிலிருந்து ஒருமாத காலத்தினுள் அந்நீக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யக் கூடிய உரிமை குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு அரசியலமைப்பின் பிரகாரம்  வழங்கப்பட்டிருந்தது. 


குறித்த கட்சி உறுப்புரிமை நீக்கம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் முஷாரப் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை இயற்கை நீதிக்கு முரணானது என்ற அடிப்படையில் தனது மனுவை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்பாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கட்சியின் ஒழுக்காற்று விசாரணை கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம். ஷஹீட் தலைமையில் இடம்பெற்றிருந்தமையும், மக்கள் காங்கிரஸின் மற்றும் மக்கள் காங்கிரஸின் அரசுக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ஏ. ரஹ்மான் போன்றவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணைக்கான அழைப்பு கட்சியினால் விடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் அவர்கள் மீதான எந்த விதமான  நடவடிக்கையினையும் மக்கள் காங்கிரஸ் எடுத்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.