அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், 'கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதேபோல, 1992ஆம் ஆண்டில் பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையிலான வழக்கில், '22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் மாற்றப்படும். கருக்கலைப்பு நடைமுறைக்கு தடை விதிக்க இனி மாகாணங்கள் ஒவ்வொன்றாக நடவடிக்கை மேற்கொள்ளும்.

கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

“இது நாட்டிற்கு சோகமான நாள். இந்த தீர்ப்பு நாட்டை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது.பெண்களின் உடல் நலம்,வாழ்க்கை கேள்விக்குரியாகியுள்ளது.” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா மற்றும் அவரது மனைவி ஆகியோரும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவதை காட்டுகிறது. இத்தீர்ப்பு லட்சக்கணக்கான பெண்களை பாதிக்கும் என அமெரிக்க பெண்கள் நல அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. அமெரிக்க பிரபலங்கள் பலரும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தீர்ப்பை எதிர்த்து ஏராளமானோர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.