கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

குறித்த பரீட்சை 3,844 பரீட்சை நிலையங்களிலும், 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் இடம்பெறவுள்ளது.

இந்தமுறை பரீட்சைக்கு 407,129 பாடசாலை பரீட்சார்த்திகளும், 1 10, 367 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்கலாக 517,496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

கொவிட்-19 தொற்றுறுதியான பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, இன்று ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பரீட்சார்த்திகள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிப்பதால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

எனினும், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சை மண்டபத்திற்கு பரீட்;சார்த்திகளுக்கு சமூகமளிக்க முடியவில்லையாயின், அதற்கு சலுகை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையை பாதிப்பின்றி நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு போராட்டங்களில் ஈடுபடுவோரிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர்களின் நலன்கருதி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.