இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தொடராக தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

குறித்த கப்பலில் 9 ஆயிரம் மெற்றிக் டன் அரிசி, 50 மெற்றிக் டன் பால்மா மற்றும் 25 மெற்றிக் டன் மருந்து பொருட்கள் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிவாரணப் பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இலங்கை தரப்பினரிடம் கையளிக்கப்படும்.

குறித்த முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் கடந்த 18ஆம் திகதி சென்னையில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கமைய தமிழகத்தில் மொத்தமாக 40 ஆயிரம் மெற்றிக் டன் அரிசி, 500 மெற்றிக் டன் பால்மா மற்றும் மருந்து பொருட்கள் என்பன இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

சுமார் 5.5 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.