பாலைவனங்கள் அதிகமுள்ள அரபு நாடுகளில் மணற்புயல் ஏற்படுவது வழக்கம் என்றாலும் கடந்த 2 மாதங்களாக வழக்கத்தை விட தீவிரமான மணற்புயல்கள் ஏற்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில், மணற்புயல் காரணமாக சில நூறு மீட்டர் தூரத்திற்கு புழுதி சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் மாறியுள்ளது.

வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரியாத் நகரின் மத்தியப் பகுதியில் வீடுகள், கார்கள் உள்ளிட்டவை மணலால் மூடப்பட்டுள்ளன.

மணற்புயல் தீவிரமாக இருந்தாலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

இதேபோல, சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஈராக்கில், ஏப்ரல் மாதத்தில் இருந்து எட்டு மணற்புயல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் தலைநகர் பாக்தாத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

கடுமையான வறட்சி, குறைந்த மழைப்பொழிவு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினாலேயே மணற்புயல்கள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரானில், "மோசமான வானிலை" மற்றும் மணற் புயல் காரணமாக பல மாகாணங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.