ஆக்லாந்தில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற  கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Papakura வில் உள்ள கிளீவெடன் சாலையில் (Clevedon Road) இரவு 10.07 மணியளவில் சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனம் நிறுத்த மறுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நிறுத்தாமல் சென்ற குறித்த கார் Takanini இல் உள்ள போர்செஸ்டர் சாலை மற்றும் வால்டர்ஸ் சாலை சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார்.

ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

தீவிர விபத்து பிரிவு பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த வழக்கு சுயாதீன பொலிஸ் நடத்தை அதிகார சபைக்கும் பரிந்துரைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

"இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பேரழிவான நிகழ்வு" என்று கவுண்டீஸ் மானுகாவ் மாவட்ட  கண்காணிப்பாளர் தளபதி ஜில் ரோஜர்ஸ் கூறினார்.

பொலிஸார் வாகனத்தை நிறுத்தப்படும்படி உங்களுக்கு சமிக்ஞை காட்டினால் வாகனத்தை நிறுத்துங்கள் என அவர் வலியுறுத்தினார்.