இந்தியா, புனேவில் உள்ள உணவகம் ஒன்று, ஒரு மணி நேரத்தில் 4 கிலோ சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தால் ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தது.

புனே அருகே வாட்கான் மாவல் பகுதியில் அமைந்துள்ளது சிவ்ராஜ் ஹோட்டல். கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் களையிழந்ததால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சிவ்ராஜ் ஹோட்டலின் உரிமையாளர் அதுல் வைகர், ‘புல்லட் தாலி சேலஞ்ச்’  எனும் புதுமையான போட்டி ஒன்றை அறிவித்து கவனம் ஈர்த்துள்ளார்.

‘புல்லட் தாலி’ என்பது அசைவ உணவுகள் அடங்கிய ஒரு தட்டு ஆகும். இது 4 கிலோ மட்டன் மற்றும் மீன்களுடன் தயாரிக்கப்பட்ட சுமார் 12 உணவுகளை உள்ளடக்கியது. ஃபிரைட் சுர்மாய், பாம்ஃப்ரெட் ஃப்ரைட் ஃபிஷ், சிக்கன் தந்தூரி, உலர் மட்டன், கிரே மட்டன், சிக்கன் மசாலா மற்றும் கொலும்பி (இறால்) பிரியாணி ஆகியவை இந்த உணவுகளில் அடங்கும். ஒவ்வொரு தாலியின் விலை ரூ .2,500 ஆகும்.

 

இந்த புல்லட் தாலி தட்டை 60 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் புல்லட் பரிசாக வழங்கப்படும் என சிவ்ராஜ் ஹோட்டலின் உரிமையாளர் அதுல் வைகர் அறிவித்தார். இதையடுத்து உணவுப் போட்டியில் பங்குகொள்ள பலரும் உணவகத்தில் குவிந்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சோம்நாத் பவார் என்பவர் இந்த சேலஞ்சில் வெற்றிப் பெற்று, புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை பரிசாக வென்றுள்ளதாக அதுல் வைகர் தெரிவித்துள்ளார்.