தனது நாட்டைக் காக்க, ரஷ்ய படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய 12 குழந்தைகளின் தாய் வீர மரணமடைந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் நாட்டின்  மருத்துவரான 48 வயதான ஓல்கா செமிடியானோவா, 2014 முதல் இராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவர் மார்ச் 3-ம் திகதி, உக்ரைனின் தெற்கில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது கொல்லப்பட்டார்.

அவர் கடுமையான துப்பாக்கிச் சண்டையின்போது வயிற்றில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருடன் போரில் ஈடுப்பட்ட சக வீரர்களும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. போரினால் அவரது சடலம் இன்னும் மீட்கப்படாததால், துயரமடைந்த குடும்பத்தினர், அவரை அடக்கம் செய்ய காத்திருக்கின்றனர்.

வீர மரணமடைந்த செமிடியானோவா, அவர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் உள்ள மர்ஹானெட்ஸ் நகரில் வாழ்ந்து வந்தார். அவர் தனது 6 குழந்தைகள் மற்றும் தத்தெடுத்த 6 குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 12 குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார்.

உக்ரைன் நாட்டில், ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் “சிறந்த தாய்” என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செமிடியானோவாவின் மரணம் குறித்து அவரது மகள் ஜூலியா கூறுகையில்,

“அம்மா கடைசி வரை வீரர்களைக் காப்பாற்றினார். இறந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் கடுமையான சண்டை காரணமாக இன்னும் என் தாயின் உடலை  அடக்கம் செய்ய முடியவில்லை” என வேதனை தெரிவித்துள்ளார்.