உக்ரைனில் கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்ய நாட்டின் ராணுவம், தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனும் எதிர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளிலுமுள்ள ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், இதில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக போராட வேண்டி, உக்ரைன் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களும், ராணுவத்தில் இணைந்து தங்களின் நாட்டுக்காக ஆயுதங்கள் ஏந்தி சண்டை போட்டு வருகின்றனர். அந்த வகையில், உக்ரைன் நடிகர் பஷா லீ என்ற நடிகரும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருந்தார்.

இதனிடையே, வடக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய படைகளுக்கும், உக்ரைன் வீரர்களுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலின் போது, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகர் பஷா லீ (வயது 33) என்பவர், ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனை உக்ரைனின் ஒடேசா சர்வதேச திரைப்பட துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தனது நாட்டினை பாதுகாக்க வேண்டி, உக்ரைனின் ஆயுத படையில் நடிகர் பஷா லீ இணைந்தார். இர்பின் பகுதியில் நடந்த சண்டையின் போது, எதிரிகளின் குண்டு வீச்சு தாக்குதலில் சிக்கிய பஷா லீ உயிரிழந்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பஷா லீயின் மறைவு, உக்ரைனிலுள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக பஷா லீ புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவும், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, அவர்களை இன்னும் அதிகம் மனம் வருந்தச் செய்துள்ளது.

அந்த பதிவில், "கடந்த 48 மணி நேரமாக நாங்கள் எப்படி வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளாகிறோம் என்பதை உட்கார்ந்து படம் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் ரஷ்ய படைகளை சமாளிப்போம். உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவோம்" என பஷா லீ குறிப்பிட்டிருந்தார்.

கிரிமியாவில் பிறந்த நடிகர் பஷா லீ, கடந்த மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி, நாட்டின் பிராந்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.