செர்னோபிள் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் எச்சரித்துள்ளது.

உக்ரேனிய அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான எனர்கோவடோம் (Energoatom) நிறுவனம், செர்னோபிள் அணுமின் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை குளிர்விக்க முடியாது என்பதால், அங்கு கதிர்வீச்சு கசிவு ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

இரு வாரங்களுக்கு முன் செர்னோபிள் அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றிய போது ஏற்பட்ட சேதத்தால், அணுமின் நிலையத்திற்கு செலுத்தப்படும் உயர் மின்னழுத்த இணைப்பு துண்டிக்கப்பட்டதாக டெலகிராம் செயலியில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அணுமின் நிலையத்தின் கண்காணிப்பு தகவல்களை உக்ரேனால் அணுக முடியாது எனவும், இதனால், அங்கு கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய முடியாது எனவும், உக்ரேனின் எரிசக்தித்துறை அமைச்சர் ஜெர்மன் கலூஷ்சென்கோ தெரிவித்தார்.