தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று காலை ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும்.

முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். தச்சங்குறிச்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாடுபிடி வீரர்கள் வருகை தந்து தங்களது பெயர்களை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

அவர்களிடம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்து அனுமதி வழங்கப்பட்டது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி ஜல்லிக்கட்டு நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.