முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் விசுவமடுவைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றே துப்பாக்கி பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் இன்று (11) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.