நுவரெலியாவில் கடையொன்றில் விலையை மாற்றி அதிக விலைக்கு சொக்லேட் விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நுவரெலியா நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று முன்தினம் (6) இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கடையிலிருந்த சொக்லேட்டின் விலையை வர்த்தகர் அழித்துவிட்டு தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப பேனாவால் எழுதி வைத்து விற்பனை செய்வதாக நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

நுவரெலியா நுகர்வோர் அலுவல்கள் அத்தியட்சகர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ரங்க கருணாரத்ன, முறைப்பாட்டின் அடிப்படையில் இரகசிய துப்பறியும் நபரை பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்ட சொக்லேட்களை கொள்வனவு செய்து சந்தேக நபரையும் சொக்லேட்களையும் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்புரை விடுத்ததையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.