டிசம்பர் இறுதி வாரத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 52 வீதி விபத்துகளில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 2,365 ஆகும். அதில் 2,461 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் வீதி விபத்துகளால் 5,383 பேருக்கு படுகாயங்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , 2022 ஜனவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்துகளில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேற்றும் நாடளாவிய ரீதியில் 11 அபாயகர விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.