தற்போது அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக   நாட்டு மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த நத்தார் பரிசை அரசாங்கம் வழங்கியதாகவும் புத்தாண்டு பரிசாக தற்போது கையிருப்பிலுள்ள டொலர்களையும் செலவு செய்து கடன் தவனையை அரசாங்கம் செலுத்தவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று மக்கள் குறையை கேட்டறியும்’மனிதாபிமான சுற்றுலா’வின் இரண்டாவது விஜயத்தை அம்பலாந்தொட்டையில் ஆரம்பித்து மக்களை சந்தித்து பேசி குறைகளைகேட்டறிந்ததுடன்
“குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு” என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கினார்.

மத்திய வங்கி ஆளுநர் டொலர் மாபியாவின் வஞ்சகர் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர்,அவர் இந்நாட்டு மக்களினதும் ஏற்றுமதியாளர்களினதும் வாழ்க்கையுடன் விளையாடி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த நபரொருவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,மொட்டு பொருளாதார சீரழிவின் பிரதான சூத்திரதாரி அவர் என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த குற்றத்தின் பொறுப்பில் இருந்து அவரினால் தப்பிக்க முடியாது என்றும் நாட்டுக்கு இந்தளவு சாபத்தை கொண்டு வந்த அமைச்சர்களுக்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.