இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தின் தலைப்பு  "13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருதல்" என இருந்த நிலையில் தற்போது அது வேறு ஒரு தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கை,

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள  கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளது

தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு “13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்” என இருந்த நிலையில், தற்போது "தமிழ் பேசும் மக்களின் அரசியல்  அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்"  என மாற்றப்பட்டுள்ளது.

புதிய வரைவுதயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கிறது. இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும்.

சில ஊடகங்கள் தொடரந்தும் தவறான தலைப்பில் இது சம்பந்தமான செய்திகளை வெளியிடுவதனால் இந்த முக்கிய ஊடக அறிக்கை வெளியிடப்படுகிறது.