கொரோனா வைரசை அழிக்கக் கூடிய Chewing gum ஐ தயாரிக்கும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுப்புது உருவெடுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரசை அழிக்கக் கூடிய Chewing gum ஐ தயாரிக்கும் புதிய முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக, இந்த ஆய்வுக்கு தலைமை வகிக்கும் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஹென்றி டேனியல் கூறுகையில்...

‘கொரோனா வைரஸ், மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பெருகுகிறது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது வைரஸ் அவர் வாயிலிருந்து வெளியேறி மற்றவர்களை அடையக்கூடும்.

இந்நிலையில் உமிழ்நீரில் உள்ள கொரோனா வைரசை எங்கள் Chewing gum கொல்லும். இதன்மூலம், கொரோனா வைரஸ் உருவாகும் இடத்திலேயே அழிக்கப்படுவதுடன், அதன் பரவலும் தடுக்கப்படும்’ என்று கூறுகிறார்.

இதற்காக, தாவரத்தில் இருந்து பெறப்படும் ‘ஏசிஇ2’ என்ற புரதம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, கொரோனா நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரியில் இதை பரிசோதித்தபோது நல்ல பலனை கொடுத்திருக்கிறது.

அடுத்தகட்டமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புரதம் அடங்கிய Chewing gum ஐ கொடுப்பது பாதுகாப்பானதாகவும், திறன்மிக்கதாகவும் இருக்குமா என்று அறிவதற்கான முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்காக அனுமதி பெறும் முனைப்பில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கலாம் அவர்கள் மூலம் பிறருக்கு பரவலாம் என்ற நிலையில், வைரஸ் பரவலுக்கு தடை போடுவது முக்கியம். அதற்கு இந்த Chewing gum உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.