வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளிற்கு  செல்வந்த நாடுகள் உதவவேண்டும்- ஜனாதிபதி

எல்லைகள் மூடப்படுவது முடக்கல்கள் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம்-ஜனாதிபதி

வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிற்கு செல்வந்த நாடுகள் உதவவேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒமிக்ரோனால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிற்கு உதவக்கூடிய நிலையில் உள்ள செல்வந்த நாடுகள்  மேலும் வலுவான விதத்தில் உதவி வழங்கவேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அபுதாபியில் ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இந்தியா சீனா அமெரிக்கா ஜப்பான் ஆகியநாடுகளின் தாராள மனப்பான்மையை நாங்கள் பாராட்டுகின்றோம்,இந்த நாடுகள் நேரடியாகவோ அல்லது கொவக்ஸ் திட்டத்தின் மூலமாகவோ எங்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை உலகின் ஏனைய பகுதியில் மிகவும் குறைந்தளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் உருவாகியுள்ளது என்பது கரிசனை அளிக்கின்றது இதனை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த வைரசினை எதிர்கொள்வதற்கு போதுமானவையல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி உலகம் மீண்டும் முன்னைய ஆபத்தான நிலைக்கு திரும்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைகள் மூடப்படுவது முடக்கல்கள் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் இதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.