பல்கேரியாவில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததில் 45 பயணிகள் பலியானார்கள்.

பல்கேரியா நாட்டின் மேற்கே சோபியா நகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென விபத்துக்குள்ளானது.

இதனை தொடர்ந்து பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது.  இந்த பேருந்து விபத்தில் 12 குழந்தைகள் உள்பட 45 பேர் சிக்கி பலியானார்கள்.

தீப்பிடித்த பேருந்தில் சிக்கியவர்களில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டு சோபியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

பேருந்து விபத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.  அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தி உள்ளது. 

இது குறித்து பல்கேரியா இடைக்கால பிரதமர் ஸ்டெபான் யானேவ் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பெருமளவிலானோர் வடக்கு மேசிடோனியா நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசிகள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கு வடக்கு மேசிடோனியா பிரதமர் ஜோரன் ஜாயேவ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.