மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உதவியால் பயின்று வந்த 1,800 மாணவர்களின் கல்வி செலவை நடிகர் விஷால் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கன்னட உலகின் பவர் ஸ்டாராக திகழ்ந்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த 29ம் திகதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து புனித் ராஜ்குமார், 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்தார்.மேலும் 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார். தற்போது அவரது மறைவால் இவரின் உதவியை பெற்று வந்த மக்கள் கதிகலங்கி போயிருந்தனர்.
இந்த நிலையில், புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும் 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் தான் ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் எனிமி படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போதே விஷால் இதனை தெரிவித்துள்ளார்.