மாரடைப்பால் உயிரிழந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் எனப்படும் புனித் ராஜ்குமார் ஜிம்மில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.

ஆரோக்கியமாக இருந்த அவர் திடீரென உயிரிழந்து இருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மரணத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக, பெங்களூரூவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை முன்பாகவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் போராடி கட்டுப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அவரது உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள், உடல் ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் அவரது உடலை வைத்தனர்.

நேற்றிரவு முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், திரைபிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள புனித் ராஜ்குமாரின் ரசிகர்களும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பெங்களூரு நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அஞ்சலி செலுத்த வரும் ரசிகர்கள் எந்த அசம்பாவீதத்திலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக கண்டிர்வா மைதானத்தை சுற்றி 6000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.