சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் 'பில்டப்' செயற்கையானதாக இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான பிறகு சசிகலா முதல் முறையாக இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா, இத்தனை ஆண்டுகள் மனதில் தேக்கி வைத்திருந்த  பாரத்தை இறக்கி வைத்திருப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்று சாடியுள்ளார்.

இந்நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

"சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் 'பில்டப்' செயற்கையானதாக இருக்கிறது. இயற்கையாக இல்லை. ஒரு நாளுக்கு லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா நினைவிடம் செல்கின்றனர். அந்த லட்சக்கணக்கானோரில் இவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதில் பெரிய விசேடம் கிடையாது. 

இது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது நடக்கப்போவதில்லை.அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம். அதிமுகவில் அவருக்கு இடம் கிடையாது” என தெரிவித்துள்ளார்.